பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Monday, January 03, 2005

சோழர்களின் பொருளாதாரப் போர்கள்

ஆசியக் கண்டத்திலுள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலோசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தான் தற்பொழுது உலகில் வேகமாக வளர்ச்சிப் பெற்று வரும் பொருளாதார நாடுகள். வரும் ஆண்டுகளில் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

சரி..அது கிடக்கட்டும். ஆனால பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பொருளாதாரம், வர்த்தகம் எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் அலசிப் பார்க்கும் பொழுது சுவரசியமான பல தகவல்கள் கிடைக்கின்றன.

அக் கால சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன் போன்றோர் தன் ஆளுமையையும், அதிகாரத்தையும் நிலைநாட்ட மட்டுமில்லாமல் பொருளாதார காரணங்களுக்காகவுமே சேர, பாண்டிய, இலங்கை, சுமத்ரா, பர்மா, கடாரம் (தற்போதைய மலேசியா), மாலத் தீவுகள் போன்ற நாடுகளின் மீது படை எடுத்தனர். தன் நாட்டு வணிகர்களுக்கும்,
பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகவே பலப் போர்களை சோழ மன்னர்கள் தொடுத்தார்கள். ஸ்ரீவிஜய நாட்டின் மீது போர் தொடுத்த ராஜேந்திரச் சோழன் தன் வணிகர்களுக்கு இடையுறு செய்த மன்னர்களுக்குப் பாடம் புகட்டியப் பிறகு, அவர்களிடமே ஆட்சியை ஓப்படைத்து விட்டான். தன் வணிகர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தான்.

இந்த வர்த்தகச் சூழநிலையைக் கொஞ்சம் அலசுவோம்

சுமத்ரா தீவுகள், கடாரம், பர்மா போன்ற பகுதிகள் ஸ்ரீவிஜய நாடு என்று அழைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்தில், அந் நாட்டை ஆண்ட மன்னன் பெயர் சூடாமணிவர்மன். ஸ்ரீவிஜய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் இடைய நல்லுறவும் வர்த்தக தொடர்பும் இருந்தது. சோழ சம்ராஜ்யத்திற்கு வர்த்தகம் செய்ய ஏராளமான வர்த்த்கர்கள் ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து வருவார்கள். கடாரத்து இரும்பு, தேக்கு மரங்கள் போன்றவை ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அது போலவே சோழ நாட்டில் விவசாயம் செழித்தோங்கியதால் மிகுதியான தானியங்கள், ஏலம், மிளகு, நெசவுப் பொருட்கள் போன்றவை தெற்காசிய மற்றும் சீனா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சுமத்ரா மட்டுமல்லாமல் சீனா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் சோழ நாட்டில் வணிகம் செய்து கொண்டிருந்தனர். வர்த்தகத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் தான் முக்கிய இடம் வகித்தது. சோழ நாட்டில் பல வர்த்தக குழக்களையும் ஏற்படுத்தினார்கள் . பல பொருட்களில் வர்த்தகம் நடைப்பெற்றது

ஸ்ரீவிஜய நாட்டுடன் நல்லுறவாகச் சென்று கொண்டிருந்த வர்த்தகம், ராஜேந்திரச் சோழன் காலத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்டது. சூடாமணிவர்மன் காலத்திற்குப் பிறகு வந்த ஸ்ரீவிஜய மன்னர்கள் சோழர்களின் வர்த்தகத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக சோழ நாட்டிற்கும், சீனாவிற்கும் இடைய இருந்த வர்த்தகத்தை சீர்குலைக்கும் முயற்ச்சியிலோ, அல்லது சீனாவுடன் தங்களுடைய வர்த்தகத்தை மேம்படுத்தி சோழ நாட்டு வர்த்தகத்தை பாதிப்படையச் செய்யும் செயலிலோ, ஸ்ரீவிஜய மன்னர்கள் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. தன் வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்ப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரச் சோழன் தனது கடற்ப்படையைக் கொண்டு ஸ்ரீவிஜயா நாட்டின் மீது 1025ம் ஆண்டு போர் தொடுத்தான் (உலக வர்த்தகத்தில் நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் இணையத் தளத்தில் இந்த நிகழ்வும் இடம் பெற்றுள்ளது)

போரில் வெற்றிப் பெற்ற ராஜேந்திரச் சோழன், அந் நாட்டை தானே ஆட்சி செய்யாமல், அம் மன்னர்களிடமே ஆட்சியை ஒப்படைத்து விட்டு, ஸ்ரீவிஜய நாட்டை, கப்பம் கட்டும் ஒரு குறிநில நாடாக, சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தான்.அது போலவே சோழ மன்னர்களின் வர்த்தகத்திற்கு பெரும் சவாலாக விளங்கியவர்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள். தெற்காசிய நாடுகளில் தங்களது வர்த்தகம் அரபு நாட்டை சேர்ந்தவர்களால் பாதிப்படையக் கூடும் என்று கருதிய சோழர்கள் அவர்களின் வர்த்தகத்தை தடுக்க முனைந்தார்கள். அரபு நாடுகள் மீது அவர்களால் படையெடுக்க இயலாத சூழ்நிலையில், அவர்களின் வர்த்தக மையங்களாக விளங்கிய மாலத்தீவுகள், மலபார் பகுதிகள் (சேர நாடு) மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மீது படையெடுத்து, அந் நாடுகளைத் தங்களின் ஆளுமைக்கு கொண்டு வந்தார்கள். இதன் மூலம் தங்கள் வர்த்தகத்தை பாதுகாத்துக் கொண்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், அரபு நாட்டுடனும் சோழர்கள் வர்த்தகம் செய்துள்ளார்கள். தங்கள் வர்த்தகம் செழிக்க வேண்டும், ஆனால் தங்களுடன் போட்டியிடுபவர்களின் வர்த்தக தளங்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணமே பலப் போர்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது. இவ்வாறு தான் இலங்கையின் தலைநகராக விளங்கிய அணுராதாபுரத்தை நிர்மூலமாக்கி, தங்களுக்கு வசதியான இடத்தில் புதிய தலைநகரை உருவாக்கினார்கள்.


சோழ நாட்டின் பொருளாதாரம் தற்பொழுது உள்ளது போலவே வரி விதிப்பு மூலமே நிர்வாகிக்கப்பட்டது. நில வரி மட்டுமல்லாமல், வர்த்தக வரியும் விதிக்கப்ப்ட்டது. வர்த்தகம் செழித்தோங்கினால் தான் தங்களுக்கு வரி கிடைக்கும், என்ற எண்ணமே, தங்கள் வர்த்தகத்திற்குப் பாதிப்பு ஏற்பட்ட பொழுதெல்லாம் அவர்களை போர் செய்யத் தூண்டியது.

பொருளாதாரம் மட்டுமில்லாமல் சோழ நாட்டைப் போன்ற மாபொரும் சாம்ராஜயத்தை நிர்வகிக்க கல்வி மிக முக்கியம் எனக் கருதிய சோழர்கள், கோயில்களில் கல்விச் சாலைகளை தோற்றுவித்தார்கள் (Human Resouce Development). சமய நூல்கள் மட்டுமல்லாது கணிதம், வானசாஸ்திரம் போன்றவையும் இந்தக் கல்விச் சாலைகளில் கற்றுத்தரப்பட்டது. அக் காலத்தில் சோழ நாட்டில் படிப்பறிவு அதிகமிருந்ததாக தெரிகிறது.

மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய கிரமங்களில் நிர்வாகக் குழுக்களை ஏற்படுத்தினார்கள். கிராம நிர்வாகங்களை கவனித்தல், வரி விதித்தல், சட்டம் ஒழுங்கு, உணவு சேமிப்பு போன்றவை இந்தக் கிராமக் குழுக்களிடமே இருந்தது (Decentralization). இந்தக் குழு ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என்பது தான் ஹைலைட் (Democracy).


இவ்வாறு ஏற்றமுடன் இருந்த இந்தியப் பொருளாதாரம், பிரிட்டிஷாரின் வரவுக்குப் பிறகு நிர்மூலமாகி, ஏழை நாடாகி விட்டது. இன்று மறுபடியும் பொருளாதாரம் வளர்ச்சி பெற தொடங்கியிருக்கிறது

13 மறுமொழிகள்:

இராதாகிருஷ்ணன் said...

"தங்கள் வர்த்தகம் செழிக்க வேண்டும், ஆனால் தங்களுடன் போட்டியிடுபவர்களின் வர்த்தக தளங்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணமே பலப் போர்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது." - காலத்திற்கும் இது தொடர்ந்துகொண்டிருக்கிறது.

10:41 AM, January 03, 2005
Anonymous said...

நிறைய விசயங்களை அறிந்துகொள்ள முடிந்தது.

By: மூர்த்தி

11:16 PM, January 04, 2005
வெற்றி said...

சசி,
மிகவும் அருமையான தகவல்கள். நிறைய விடயங்களைத் தெரிந்து கொண்டேன்.

சோழ மன்னர்கள் சீனர்களுடன் வர்த்தகத் தொடர்புகள் வைத்திருந்தார்கள் என்பது இன்றுவரை நான் அறிந்திருக்கவில்லை.

/* இலங்கையின் தலைநகராக விளங்கிய அணுராதாபுரத்தை நிர்மூலமாக்கி, தங்களுக்கு வசதியான இடத்தில் புதிய தலைநகரை உருவாக்கினார்கள். */

அநுராதபுரம் பல காலம் இலங்கையின் தலைநகராக விளங்கியது. தமிழ் மன்னன் எல்லாளன் இலங்கையை ஆண்ட போதும் அநுராதபுரம் தான் தலைநகரம்.
நீங்கள் சொன்னது போல், சோழர்கள் பொலநறுவை எனும் இடத்தைத்தான் தலைநகரமாக அமைத்தனர். திருகோணமலைக்கு அருகில் உள்ள இடம் பொலநறுவை. சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவாலயங்கள் இன்றும் பொலநறுவையில் கவனிப்பார் அற்றுக் கிடக்கிறது. இலங்கை இனப்பிரச்சனை தீவிரமடைய முன் இங்கே சிவராத்திரி போன்ற விழாக்கள் அங்கிருந்த தமிழ்மக்களால் பத்திமயமாக விமரிசையாகக் கொண்டாடப்படும்.

இப்போ அந்த இடங்கள் எல்லாம் சிங்களமயமாக்கப்பட்டு விட்டது.

அன்று எம் முன்னோர்கள் [சோழர்கள்] விட்ட தவறால் இன்று நாம் அல்லல்படுகிறோம். வந்தவர்கள் அங்கே தமது ஆட்சியை தக்க வைத்திருந்தால் இன்று இந்த இன்னல்கள் இல்லாதிருந்திருக்குமோ என்னவோ! வந்தனர், வென்றனர், சென்றனர். அங்கே தொடர்ந்து தங்கிய நம்மவர் இன்று நலிவடைந்த நிலையில்!!!

எமது முன்னோரின் தொலைநோக்குப் பார்வையற்ற வரலாற்றுத் தவறு என நினைக்கிறேன்.

10:16 PM, April 20, 2007
சிவா சின்னப்பொடி said...

18 ம் நூற்றாண்டில் (1790 என்று நினைக்கிறேன்) தமிழகத்தின் பாண்டிச் சேரி காரைக்கால் பகுதிகளை கொலனிகளாக வைத்திருந்த பிரெஞ்சு அரசின் ஆளுனராக இருந்த தளபதி துப்ளக்ஸ் என்பவர் தமிழ் சமூகம் பற்றி ஒரு ஆய்வை செய்திருக்கிறார்.

இந்த ஆய்வில் முக்கியமான அம்சம் சோழரைப் பற்றியது.ஐரோப்பியர்களான தாங்கள் கடல்கடந்து சென்று நாடுகளைப் பிடித்து கொலனிகளாக வைத்திருப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தச் சோழர்கள் அதாவது தமிழர்கள் கிழககு மற்றும் தெற்காசியாவிலுள்ள பல நாடுகளை பிடித்து தங்கள் ஆட்சியின் கிழ்; வைத்திருந்திருக்கிறார்கள். அந்த நாடுகளில் அவர்கள் திரட்டிய செல்வம்; எல்லாவற்றையும் அவர்கள் தொழில் துறைகளில் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு அவர்களுடைய நாடு பிரான்சை விட பலம் கொண்ட நாடாகவும் வளாச்சியடைந்த நாடாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு ஆலோசகர்களாக இருந்த பிராமணர்கள் நீங்கள் சென்ற இடங்களில் எல்லாம் கொலையும் கொள்ளையும் செய்து பாவம் சம்பாதித்துவிட்டீர்கள்.இந்த கொடிய பாவம் உங்கள் சந்ததியை அழித்துவிடும் அதற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு கோவில்களை கட்டுங்கள் யாகங்கள் நடத்துவதற்கும் வேத பாராயணம் செய்வதற்கும் பிராமணர்களுக்கு தானங்களை வழங்குங்கள் எற்று கூறி அந்த செல்வம் எல்லாவற்றையும் கோவில் கட்டுவதற்கும் சதுர்வேதி மங்கலங்கள் என்ற யாக சாலைகளை அழைப்பதற்கும் செலவழிக்க வைத்துவிட்டார்கள். இன்று சோழர்களும் இல்லை.அவர்களது இராட்சியமும் இல்லை. அவர்களது குடி மக்களான தமிழர்கள் தங்களது முன்னோர்கள் செய்த பாவம் தீர இன்னமும் கோவில்களில் பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறார்கள். சோழர்களை போரில் வெல்ல முடியாத அவர்களது எதிரிகள் மதம் என்ற அவர்களது பலவினத்தை வைத்து அழித்ததை பிரான்ஸ் அரசாங்கம் உதாரணமாகக் கொள்ளவேண்டும் என்று துப்ளக்ஸ் தனது ஆய்வில் தெரிவித்திருக்கிறார்.

11:53 PM, April 20, 2007
KULAKKODDAN said...

சோழருடைய படையெடுப்பு இந்திய வரலாற்றில் மட்டுமல்ல இலங்கை வரலாற்றிலும் மிக முக்கியமான நிரந்தரப் பாதிப்புக்களை உருவாக்கியுள்ளது.
அவர்களுடைய கடலோடும் அறிவு சிறப்பானது. தென் தமிழகத் துறைமுகத்திலிருந்து இலங்கையின் திருகோணமலை அருகேயுள்ள இலங்கைத் துறைமுகத்திற்கு சுமார் 50 000 படை வீரர்களை நகர்த்தினார்கள். அதில் ஒரு பிரிவு இலங்கைத் தீவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ஒரு பிரிவு தான்
தென்னாசியப் படையெடுப்பில் ஈடுபட்டது. இதில் இரு விடயங்கள் அவதானிக்கலாம். 1. அரபு வணிகர்களின் ஆதிக்கத்தை தமிழத்திலும் இலங்கையிலும் அவர்கள்டைய காலத்தில் கட்டுப்படுத்தியது. 2. தமிழகச் சிற்றரசுகளை ஒன்றாக்கி தமிழ்த் தேசிய உணர்வை உருவக்கியது. ( இதன் பின்னர் தமிழ்த்தேசியம் தமிழகத்தில் மறைந்து சிதைய, ஆயிரம் ஆண்டுகளூக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் முன்னெடுக்கின்றார்கள்).

இலங்கையில் சோழர் தமிழர் சார்பான அயலுறவுக் கொள்கையைக் கொண்டிருக்க, சிங்கள மன்னர்கள் சோழருக்கு எதிரான அரசுகளுடன் உறவுகளை வளர்த்து இலங்கையில் தமிழ் அரசுகளை அழித்தார்கள்.( தற்கால
இலங்கை இந்திய உறவுகளை ஒப்பு நோக்கவும்.). அந்தமான். லட்ச தீவுகளை
கைப்பற்றி தனது ஆட்சிக்குள் வைத்திருக்க சோழருடைய படையெடுப்பு உதவியது. ஆனால் 30 கி.மீ தொலைவில் உள்ள இலங்கையை ஆட்சிக்குள் கொண்டுவர முடியாமற் போனதற்கு தமிழத்தில் ஆட்சிகள் பிளவுபட்டிருன்ததை சிங்கள ஆட்சியாளர்கள் நன்கு பயன்படுத்தினார்கள்.
சோழருடைய வீழ்ச்சி தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் பேரிழப்பாகும்.


குளக்கோட்டn

4:24 PM, April 21, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

2005 தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் எழுதிய இந்தப் பதிவுக்கு இப்பொழுது தான் அதிக பின்னூட்டம் வருகிறது :-)

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி

6:23 PM, April 21, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

குளக்கோட்டன்,

சோழர்கள் தமிழ் தேசியத்தை நிறுவினார்கள் என்பது தவறு.

சோழர்கள் ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை வைத்திருந்தார்களே தவிர பாண்டியர்கள் போன்று அவர்கள் தமிழ் மீது பற்று மிக்கவர்கள் அல்ல. அவர்களுடைய சாம்ராஜ்யம் சோழ சாம்ராஜ்யம் அவ்வளவே, தமிழ் தேசியம் அல்ல

இன்னும் சொல்லப்போனால் சோழர்களின் காலத்தில் தான் சில குறிப்பிட்ட சாதியினர் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதாக குறிப்பிடுவார்கள்

6:33 PM, April 21, 2007
செல்வநாயகி said...

நிறைய விடயங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி.

6:57 PM, April 21, 2007
செல்வமுரளி said...

அட ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை கோயிலில் இப்போது இருக்கும் மைக்ரோ பைனான்ஸ் முறை அப்போதே அமல்படுத்தப்பட்டதாம்.
பெரிய தீர்க்கதரிசிதான் ராஜராஜன்

ராஜராஜ சோழன் காலத்தில்தான் பிறமொழி சொற்கள் கலந்த தமிழ் பயன்படுத்தாமல் தமிழி என்ற தமிழையே பயன்படுத்தவேண்டும் ராஜராஜர் உத்தரவு போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி!
என்றும் அன்புடன்
செல்வ.முரளி
http://www.tamilvanigam.in

11:06 AM, February 06, 2010
chakravarthy said...

இப்பதிவை தற்போது தான் படிக்க நேர்ந்தது.தகவளுக்கு நன்றி.சோழர்கள் மேலிருந்த தவறான கற்பிதங்கள் கலைந்தன.மேலும் சோழர்கள் பற்றியே ஆய்வு புத்தகங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ளவும்.

3:04 AM, October 02, 2010
chakravarthy said...

வணக்கம்.
பின்னூட்டங்களில் தெரிந்துகொண்டேன் போர் புரியும்போது செய்த பாவங்களை களைய கோயில்கள் கட்டினோமென்று.இது எந்த அளவிற்கு உண்மை.

3:34 AM, October 02, 2010