பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Sunday, January 02, 2005

புதிய வாய்ப்புகள், சவால்கள்

இந்த ஆண்டில் இருந்து கோட்டா முறை ஜவுளித் துறையில் விலக்கிக் கொள்ளப்படுவதால், ஜவுளித் துறைக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகள் தங்களுக்கு தேவையான ஜவுளிப் பொருட்களை இறக்குமதி செய்யும் பொழுது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரம் ஒதுக்கி அந்த அளவுக்கு மட்டுமே அந்த நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும். உதாரணமாக தன் தேவையில் 10% சதவீதத்தை பாக்கிஸ்தானில் இருந்தும், 15% பங்களாதேஷில் இருந்தும், 10% இலங்கையில் இருந்தும் இறக்குமதி செய்யும். ஒதுக்கப்பட்ட கோட்டாவுக்கு அதிகமாக அந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாது. இதனால் ஏற்படும் நன்மை, குறிப்பிட்ட நாடுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவுக்கு ஏற்றுமதியை நிச்சயமாக பெற முடியும்.

இந்த கோட்டா முறை உலக வர்த்தக சங்கம் (WTO) சட்டதிட்டங்களின் உருவாக்கப்பட்ட Agreement on Textiles and Clothing (ATC) என்ற ஒப்பந்தப் படி சனவரி 1, 2005 முதல் விலக்கப்படுகிறது. கோட்டா முறையால் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்து கொண்டிருந்த இந்தியாவிற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7% ஜவுளித் துறையைச் சார்ந்தே இருக்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஜவுளித் துறையின் பங்கு 25%. ஆனால் உலகின் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 3% என்ற சொற்ப அளவில் தான் உள்ளது. இந்த கோட்டா முறை விலக்கப்படுவதால் இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளுக்குமே இந்த வாய்ப்பு இருப்பதால், பிற நாடுகளுடன் கடுமையாகப் போட்டியிட்டு தான் வய்ப்புகளை பெற முடியும்.

குறிப்பாக சீனாவின் கடும் சவாலை இந்தியா சந்தித்தாக வேண்டிய சூழ்நிலை. 2002ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஜவுளித் துறையின் சிலப் பிரிவுகளில் கோட்டா முறை விலக்கிக் கொள்ளப்பட்ட பொழுது,
இத்துறைகளில் 9%மாக இருந்த சீனாவின் பங்கு 45%மாக உயர்ந்தது. இது மேலும் உயர்ந்து 70% ஐ எட்டும் என்று கருதப்படுகிறது. 2002ல் அமெரிக்காவின் மொத்த ஜவுளி சந்தையில் சீனாவின் பங்கு 16%. கோட்டா முறை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இது 50%ஐ தாண்டும் என்று அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். சீனாவின் இந்த வளர்ச்சி இந்தியாவிற்கு மட்டுமல்லாது, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் கடும் சவாலாக இருக்கும்.

சவால்கள் இருந்தாலும், தற்போதைய நிலையில் இருந்து நிச்சயமாக முன்னேற்றம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஏராளமான வாய்ப்பு இப்பொழுது நமக்கு கிடைத்திருக்கிறது. எந்தளவுக்கு நாம் அதனைப் பயன்படுத்தி கொள்கிறோம், பிற நாடுகள் கொடுக்கும் சவால்களை எதிர்கொள்கிறோம், தரமான உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வெற்றி அமையும்.

அடுத்த வாய்ப்பு பார்மா (Pharma) துறையில், புதிய பேடண்ட் (patent) சட்டம் அமலுக்கு வருவதன் மூலமாக கிடைத்திருக்கிறது. இது வரையில் இருந்த மருத்து தயாரிப்புமுறைக்கான காப்புரிமை (process patents) நீங்கி, தயாரிக்கப்பட்ட பொருளுக்கான காப்புரிமை அமலுக்கு வருகிறது (product patents). இதனால் சுமார் 90% மேற்பட்ட மருந்துகள் காப்புரிமை பெற்றப் பிரிவில் இருந்து நீங்குகிறது. இவ்வாறு கிடைக்கும் உற்பத்தி வாய்ப்புகள் மட்டும் பல பில்லியன்கள்.

அமெரிக்காவின் USFDA எனப்படும் Food and Drug Administration அங்கீகாரம் பெற்ற 70க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அமெரிக்காவிற்கு அடுத்து அதிக அளவில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் இந்தியாவில் தான் உள்ளன. இதனால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர அமெரிக்காவில் இருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மென்பொருள் துறையில் உள்ளது போல இந்தியாவிற்கு தனது தயாரிப்புகளை (Outsourcing) மாற்றும் வாய்ப்புகளும் இருக்கிறது.
இதனால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களான ரேன்பேக்சி, சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேப், சன் பார்மா போன்ற நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்க நிறுவனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருக்கிறது

மென்பொருள் துறை வளர்ச்சிப் பெற்றது போலவே, பார்மா மற்றும் ஜவுளித் துறைகளும் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்த இரு துறைகளின் வளர்ச்சி, தற்போதைய சூழ்நிலையில் முக்கியமாக கவனிக்கப்படும்.


0 மறுமொழிகள்: